புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள்
அனல் வீசும் கவிதைகளால் தமிழர் நரம்பில் உணர்வூசி ஏற்றிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரும்பெரும் வாழ்க்கை வரலாறு சுருக்க வடிவில்! 127ஆவது பிறந்தநாள் சிறப்புப் பதிவு.
1891
புதுவையில் கனகசபை - இலக்குமி இணையருக்கு ஏப்ரல் 29, புதன் இரவு 10:15 மணிக்குப் பிறந்தார். சுப்புரத்தினம் எனப் பெயரிடப்பட்டார்.
1895
ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார்.
1908
முதுபெரும் புலவர் பு.அ.பெரியசாமி அவர்களிடமும் பின்னர், புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சித்தாந்த வேதாந்தப் பாடங்களையும் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். வேணு நாயக்கர் வீட்டுத் திருமணத்தில் பாரதியாரைச் சந்தித்தார்.
1909
கல்வி அதிகாரி கையார் உதவியால் காரைக்காலைச் சார்ந்த நிரவியில் ஆசிரியராகப் பணி ஏற்றார்.
1910
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் தூண்டப்பெற்று பாரதியார், வ.வே.சு., டாக்டர் வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். பாரதியாரின் ‘இந்தியா’ ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தந்தார். இக்காலக்கட்டத்தில் பாவேந்தர் அனுப்பி வைத்த துப்பாக்கியே ஆஷ் கலெக்டரின் உயிரைப் பறித்தது என்பது வரலாறு.
1916
இவ்வாண்டு ஜனவரி 23 அன்று கவிஞரின் தந்தையார் இயற்கை எய்தினார்.
1918
பாரதியாருடனான பழக்கம் நெருக்கமானது. புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் கவிதைகள் எழுதினார். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உதவியும் உறுபொருள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.
1919
திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறை வைத்த அரசு, தனது தவற்றையுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் வென்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.
1920
இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றார். புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனியம்மையை மணந்தார். கதர்த்துணியைத் தோளில் சுமந்து தெருத் தெருவாய் விற்றார்.
1926
‘ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது’ எனும் நூலை இயற்றினார்.
1928
தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியாருடன் இணைந்தார். பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறினார்.
1929
‘குடியரசு’, ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதினார். இந்தியாவிலேயே குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார்.
1930
பாரதியாரின் புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் இவர் பாடிய சிறுவர் சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப் பாட்டு, கதர் இராட்டினப்பாட்டு ஆகியவற்றை இவ்வாண்டு நூலாக வெளியிட்டார். தொடர்ந்து, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு நூல்களையும் வெளியிட்டார். டிசம்பர், 10-இல் ‘புதுவை முரசு’ வார ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1931
‘புதுவை முரசு’ (05.01.1931) ஏட்டில் ‘செவ்வாய் உலக யாத்திரை’ கட்டுரை படைத்தார். ‘சுயமரியாதைச் சுடர்’ என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலைக் ‘கிண்டல்காரன்’ என்ற பெயரில் வெளியிட்டார்.
1933
ம.சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில் ‘நான் ஒரு நிரந்தரமான நாத்திகன்’ என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
1934
‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ எனும் இவர் நாடகம் இவ்வாண்டில் ஈ.வெ.ரா.பெரியார் தலைமையில் அரங்கேறியது.
1935
இந்தியாவின் முதல் பாட்டு ஏடான ‘ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ தொடங்கினார்.
1938
‘பாரதிதாசன் கவிதைகள்’ முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, நாராயணசாமி நாயுடு ஆகியோர் பொருள் உதவியால் வெளியிட்டார். ‘தன்மான இயக்கத்தின் சிறந்த பாவலர்’ என்று பெரியாரிடம் பாராட்டுப் பெற்றார்.
1939
‘கவி காளமேகம்’ திரைப்படத்துக்குக் கதை, உரையாடல், பாடல் எழுதினார்.
1941
‘எதிர்பாராத முத்தம்’ எனும் குறுங்காவியத்தைக் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிட்டார்.
1944
பெரியார் ஈ.வெ.ரா., முன்னிலையில் தன் தலைமகள் சரசுவதியைப் புலவர் கண்ணப்பர் அவர்களுக்கு மணம் செய்வித்தார்.
1945
புதுவை, 95, பெருமாள் கோவில் தெரு வீட்டை வாங்கினார். ‘தமிழியக்கம்’ (ஒரே இரவில் எழுதியது) நூல் வெளியிட்டார்.
1946
‘முல்லை’ ஏடு தொடங்கினார். பேரறிஞர் அண்ணா இவரைப் ‘புரட்சிக்கவி’ என்று போற்றி ரூ.2,000 கொண்ட பொற்கிழியை நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி வழங்கினார். முப்பத்தேழாண்டு தமிழாசிரியர் சேவைக்குப் பின் 08.11.1946 அன்று பள்ளியிலிருந்து ஓய்வு பெற்றார்.
1947
புதுக்கோட்டையிலிருந்து ‘குயில்’ ஏட்டை வெளிட்டார்.
1948
‘குயில்’ மாத ஏட்டுக்குத் தடை இடப்பட்டது.
1949
‘பாரதிதாசன் கவிதைகள்’ 2-ஆம் தொகுதி வெளியிட்டார்.
1950
திருச்சியில் பாரதிதாசனார்க்கு மணிவிழா.
1955
புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அவைத்தலைமை ஏற்றார்.
1958
‘குயில்’ வார ஏடாக மாறியது. தமிழகப் புலவர் குழுவின் சிறப்பு உறுப்பினர் ஆனார்.
1959
திருக்குறளுக்கு ‘வள்ளுவர் உள்ளம்’ என்ற உரை விளக்கத்தை (01.11.1959) எழுதினார்.
1961
சென்னைக்குக் குடிபெயர்ந்தார். ‘பாண்டியன் பரிசு’ கதையைப் படமாக்க முயன்றார்.
1962
சென்னையில் மீண்டும் ‘குயில்’ வார ஏடு தொடங்கினார். ‘அனைத்துலகக் கவிஞர் மன்றம்’ தோற்றுவித்தார். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் மூதறிஞர் இராஜாஜியால் பொன்னாடை அணிவிக்கப்பட்டுக் கேடயம் வழங்கப் பெற்றார்.
1963
‘பாரதியார் வரலாறு’ திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தார்.
1964
ஏப்ரல் 21 அன்று சென்னை, பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் புகழுடல் அடக்கம் செய்யப்பட்டது.
1965
புதுவைக் கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் ஏப்ரல் 21 அன்று புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பெற்றது.
1968
சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது பாவேந்தரின் திருவுருவச்சிலை, சென்னை மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.
1970
கவிஞரின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பெற்றது.
1971
ஏப்ரல் 29 அன்று பாவேந்தர் பிறந்தநாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப்படத் தொடங்கி ஆண்டுதோறும் தொடர்கிறது. புரட்சிக் கவிஞர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95-ஆம் எண் இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிக் கவிஞர் நினைவு நூலகம், காட்சிக்கூடம் அமைந்துள்ளன.
1972
ஏப்ரல் 29 அன்று புரட்சிக்கவிஞர் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.
1978
எம்.ஜி.ஆர்., அவர்கள் தலைமையிலான அரசு பாரதிதாசன் பிறந்தநாள் விழாவைத் தமிழ்நாடு அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடியது. இவ்வாண்டு முதல் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ (ரூ.10,000 தொகை - 4 பவுன் தங்கப்பதக்கம்) வழங்கப் பெறுகிறது. முதன்முதலாக இப்பரிசைப் பெற்றவர் பாவேந்தரின் சீடர் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்.
பாவேந்தர் பெயரில் ‘பாரதிதாசன் பல்கலைக் கழகம்’ நிறுவப்பட்டது.
1982
பாவேந்தர் பெயரில் ‘பாரதிதாசன் பல்கலைக் கழகம்’ நிறுவப்பட்டது.
1990
பாவேந்தர் நூற்றாண்டான இவ்வாண்டு திரைத்துறையில் ‘பாவேந்தர் பரிசு’ அறிவித்தார் கலைஞர் மு.கருணாநிதி. இவர் தலைமையிலான தமிழக அரசு வழங்கிய பாரதிதாசன் விருதை முதன் முறையாகப் பெற்றவரும் பாவேந்தரின் சீடரான உவமைக் கவிஞர்தாம்.
1991
பாரதிதாசன் நூற்றாண்டு நிறைவையொட்டி, கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு பாவேந்தரின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது. கவிஞரின் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 இலட்சம் வழங்கியது.
நன்றி: பாரதிதாசன் கவிதைகள், அருள்சுடர் பதிப்பகம்
இது பற்றி உங்கள் கருத்து?...